நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!

சாதனையாளர்கள்

அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர்களையும், நம் நாட்டில் இளம் சாதனையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்படும். உங்க குழந்தையையும் சாதனை குழந்தையாக சாதிக்க உதவுங்கள்.

Wednesday, May 17, 2006

சாதனை 6 – இரு கால்கள் இல்லாமல் எவரெஸ்ட் சிகரம் தொட்டவர்


இரண்டு கால்களையும் இழந்த நியூசிலாந்து மலையேறும் வீரர் ஒருவர் செயற்கை கால்கள் உதவியுடன் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இமயமலையில் எவரெஸ்ட் சிகரம் , கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரத்து 850 மீட்டர் ( 29 ஆயிரத்து 35 அடி) உயரமுடையது.

எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதல் முதலாக ஏறி சாதனை படைத்தவர் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங். இவர்கள் இந்த சாதனையை 1953ம் ஆண்டு நிகழ்த்தினர்.

அதே நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் மார்க் இங்லீஸ். வயது 47. இவரும் மலையேறும் வீரரே. கடந்த 1982ம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கூக் என்ற சிகரம் மீது மார்க் இங்லீசும், அவரது நண்பரும் ஏறிக் கொண்டிருந்தனர்.

அப்போது தட்பவெப்பநிலை மாறி மார்க் இங்லீஸ் இருந்த பகுதி பனியால் உறைந்து விட்டது. இங்லீசும், அவரது நண்பரும் 14 நாட்கள் அந்த மலையில் இருந்த ஒரு குகையில் அடைந்து இருந்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டாலும், அந்த விபத்தில் இங்லீசின் இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழே துண்டாகி விட்டன.

மலையேறும் வீரர் ஒருவருக்கு கால்கள் தான் முக்கியமானது. அதையே இழந்தாலும் இங்லீஸ் மனம் தளரவில்லை. செயற்கை கால்களை பொருத்தி மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.

தனது வாழ்நாள் சாதனையாக உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மீது ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்று இங்லீஸ் திட்டமிட்டார். இதன்படி கடந்த 40 நாட்களுக்கு முன் அந்த சாதனை முயற்சியை இங்லீஸ் மேற்கொண்டார்.

இரண்டு கால்களையும் இழந்த ஒருவர் நடக்க நினைப்பதே அரிதான ஒன்று. செயற்கை கால்களுடன் மலை மீது ஏறுவது என்பது சாதாரண விஷயமில்லை. எவரெஸ்ட் மீது ஏறிக் கொண்டு இருந்த போது 6 ஆயிரத்து 400 மீட்டர் உயரத்தில் இங்லீசுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அவர் அணிந்து இருந்த இரண்டு செயற்கை கால்களில் ஒன்று சேதமடைந்தது. இருப்பினும், கைவசம் தயாராக கொண்டு சென்று இருந்த மாற்று செயற்கை காலை பொருத்தி கொண்டு இங்லீஸ் தொடர்ந்து சிகரம் மீது ஏறினார்.

நேற்று முன்தினம் இரவு எவரெஸ்ட் உச்சியை தொட்ட இங்லீஸ் புதிய சாதனையை புரிந்து விட்டார். இரண்டு செயற்கை கால்களின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஒருவர் அடைந்தது இதுவே முதல் முறை. உடன் அங்கிருந்தபடியே நியூசிலாந்தில் உள்ள தனது மனைவியுடன் இங்லீஸ் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

புதிய சாதனை புரிந்த மார்க் இங்லீசுக்கு நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாமும் அவரை பாராட்டுவோம், கொண்ட காரியத்தில் சுணக்கம் இல்லாமல் முன்னேறுவோம்.

நன்றி: தினமலர், யாகூ

Thursday, May 04, 2006

சாதனை 5 - 7 மணி நேரத்தில் 65 கி.மீ ஓடிய 4 வயது சிறுவன்

இந்தியாவிலும் ஓர் உலக சாதனை நாயகன்

புவனேஸ்வர்: ஒரிசாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் புதியா சிங், 65 கி.மீ., தூரம் மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைத்தான். சிறுவனின் சாதனை, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

ஒரிசாவை சேர்ந்த புதியா சிங் பிறந்து நான்கு ஆண்டுகள் எட்டு மாதம் தான் ஆகிறது. இந்த வயதில் அத்தனை எளிதில் பிறர் யாரும் செய்யாத சாதனையை செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் தன் பக்கம் திருப்பியுள்ளான் இந்த சாதனைச் சிறுவன்.

மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைக்க வேண்டும் என்பது சிறுவனின் நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையை செயல்படுத்த நேற்று புதியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரிசாவின் புனித நகரான பூரியில் உள்ள புகழ் பெற்ற ஜெகநாதர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் நேற்று காலை தனது சாதனை ஓட்டத்தை துவங்கினான். சிறுவனின் பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ், மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேர் உடன் ஓடி வந்தனர். ஓட்டப் பந்தய வழி முழுவதும் சாலையில் ஓரங்களில் திரண்டிருந்த மக்கள் புதியாவை கைதட்டி உற்சாகப்படுத்தி, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ஏழு மணி இரண்டு நிமிடங்களில் 65 கி.மீ., தூரத்தை கடந்து புவனேஸ்வர் நகருக்குள் நுழைந்த புதியா தனது ஓட்டத்தை நிறைவு செய்தான்.

பின்னர் சாதனைச் சிறுவனை கவுரவிக்கும் வகையில் புவனேஸ்வரில் பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில், லிம்கா சாதனைப் புத்தகத்தின் உதவி ஆசிரியர் அம்ரீன் தூர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது," பூரியிலிருந்து புவனேஸ்வர் வரை புதியாவின் ஓட்டத்தை கவனமாக கண்காணித்தோம். இத்தனை சிறிய வயதில் வேறு யாரும் இது போன்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க முடியாது. இது மிகச் சிறந்த சாதனை மட்டுமல்ல அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு விஷயம்.

புதியாவின் பிறந்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் அவன் செய்த சாதனைகள் வரை அனைத்தும் முன்னிலைப்படுத்தப்படும். சிறுவனின் சாதனை மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும். புதியாவின் சாதனை குறித்த விவரங்கள் லிம்கா ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். வரும் 2007ம் ஆண்டிற்கான லிம்கா புத்தகத்தில் சிறுவனின் சாதனை இடம் பெறும்,' என்றார்.

பாராட்டு விழாவில் ஒரிசா விளையாட்டு துறை அமைச்சர் டெபாசிஸ் நாயக், காங்கிரஸ் கட்சி எம்.பி., அர்ச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதியாவின் தாயார் சுகந்தி சிங் தனது மகனின் சாதனை குறித்து," புதியாவால் ஒரிசாவிற்கும், இந்தியாவிற்கும் பெருமை கிடைத்துள்ளது. எனது மகனின் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்,' என பெருமிதத்துடன் கூறினார்.

நன்றி: தினமலர் - 03-05-06

Wednesday, May 03, 2006

சாதனை 4 - கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர். ஆம் அந்த பொன்மொழிக்கு ஏற்ப மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிறுவன் கலக்கி கொண்டு இருக்கிறான். அதுவும் காளையை அடக்கும் போட்டியில். இந்த காளையை அடக்கும் போட்டியை சில நாடுகளில் வீரவிளையாட்டாக கருதுகிறார்கள். ஒரு நாட்டில் அந்த விளையாட்டை தேசிய விளையாட்டாக வைத்துள்ளனர். நமது நாட்டில் கூட அதுவும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளையை அடக்கும் போட்டியை நடத்தி பரிசும் வழங்குகிறார்கள்.

மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் ரபியல் மிரபல் மார்டினெக்ஸ். இவரது மகன்தான் ரபிட்டா மிரபல். இவனுக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. ஆனால் இந்த வயதில் காளைகளை அடக்கும் ஏராளமான போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகைசூடியுள்ளான். மொத்தத்தில் அவனது சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

9 வயதில் கலந்து கொள்ள ஆரம்பித்த இவன், இன்று வரை அலாதி பிரியத்துடன் காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்கிறான். அதற்கு பாதுகாப்பு கவசமாக அவன் வைத்துக் கொள்வது சிவப்பு நிறத் தொப்பியும்,ஒரு இரும்பு கேடயமும் ஆகும்.

இது வரையிலும் சுமார் இரண்டு டஜன் அதாவது 24 போட்டிகளில் கலந்திருக்கிறான். சமீபத்தில் ஏப்ரல் 16 ந்தேதி மெக்சிகோ அருகில் உள்ள டெக்ஸ்கோகோவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டான். அந்த போட்டியில் உயிரை பணயம் வைத்து வெற்றி பெற்றான். இந்த மாதிரியான போட்டியில் சிறியவர்களும், பெரியவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனாலும் இந்த சின்ன வயதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது கடினமான ஒன்றாகும். இந்த காளையை அடக்கும் போட்டியில் பல தடவை உயிரை காப்பாற்றி வெற்றி பெற்றிருக்கிறான்.

நன்றி: தினத்தந்தி

Sunday, April 23, 2006

சாதனை 3 - முட்டையில் வித்தை


பொதுவாக வீட்டில் முட்டையை பார்த்தால் என்ன செய்ய தோன்றும். இது என்ன கேள்வி? எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிட தோன்றும் என்கிறீர்களா. அதுதான் இல்லை.

சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த பிரதீப்குமாருக்கு வேறு விதமாக தோன்றி இருக்கிறதே. அப்படி முட்டையில் அவர் என்ன வித்தை செய்தார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறதா? அதற்கு முன்பு பிரதீப்குமாரை பற்றி ஒரு சின்ன அறிமுகம்.


23 வயதேயான பிரதீப்குமார் சிந்தாதிரிப் பேட்டையில் சொந்தமாக வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்து இருக்கிறார். அவரது தாயாரின் பெயர் நித்திய கல்யாணி. ஏதாவது புதுமையான சாதனை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற தனியாத ஆர்வம் உடையவர் பிரதீப். எதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம் என்று நினைத்தவருக்கு கைகொடுத்த பொருள்தான் முட்டை.

இந்த முட்டையை வைத்து என்ன சாதனை செய்யலாம் என்று யோசித்தார். முட்டை லேசாக தவறினால் உடைந்து விடும். அப்படிப்பட்ட தன்மை கொண்ட முட்டையில் அதிக துளைகள் போட்டு சாதனை செய்தால் என்ன என்று அவருக்கு தோன்றியது. இதனால் முட்டையில் யாராவது அதிக துளைகள் போட்டு இருக்கிறார்களா? என விசாரித்தார். அப்படி யாரும் செய்ததில்லை என்று அறிந்தவுடன் தனது எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க தீவிரமாக பாடுபட்டார். இரவு தனது பணி முடிவடைந்தவுடன் தனது சாதனை முயற்சியை தொடங்கி விடுவார். இந்த சாதனை முயற்சியில் ஏராளமான முட்டைகளையும் உடைத்து இருக்கிறார்.

முதலில் முட்டையின் அடிப்பாகத்தை லாவகமாக உடைத்து அதனுள் இருந்து மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை வெளியே எடுத்து விடுகிறார். பின்பு விசேஷமாக வடிவமைக்கப்பட்ட டிரில் பிட் மூலம் சிறு துளைகள் இடுகிறார்.

இவ்வாறு ஒரு முட்டையில் அதிக பட்சமாக சுமார் 11 ஆயிரம் துளைகள் போட்டு இருக்கிறார். இந்த துளைகள் போட 15 மணி நேரம் செலவிட்டாராம். இந்த ஒவ்வொரு துளைகளும் மிக நுட்பமாக 0.2 மில்லி மீட்டரில் போடப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் முதலில் முட்டையில் அதிக துளைகள் போடவேண்டும். அதே நேரத்தில் முட்டைக்கு மிக அருகில் துளைகள் போடக் கூடாது. மிக அருகருகே துளை போட்டால் முட்டை உடைந்து விடும். எனவே கவனமாக அதிக நெருக்கம் இல்லாமலும் துளைகள் அமைய வேண்டும். இது மிகவும் சவால் நிறைந்த வேலையாக இருந்தது. எனக்கு ஆரம்பத்தில் இந்த சாதனையைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் எனது நண்பர்கள் கொடுத்த ஊக்கம் தூண்டுகோலாக அமைந்தது,'' என்கிறார் பிரதீப்குமார்.

இதே போல் வேறு இரண்டு முட்டைகளில் 0.3 மில்லி மீட்டரில் சுமார் 7 ஆயிரத்து 500 துளைகளும், 0.4 மில்லி மீட்டரில் 4 ஆயிரத்து 730 துளைகள் இட்டு சாதனை படைத்து இருக்கிறார். 100 துளைகள் நிறைவடைந்தவுடன் துளைகளை கணக்கிட குறித்து வைத்து கொள்வாராம். இந்த துளையிட்ட முட்டையை சிறிய சதுர வடிவ கண்ணாடி கூண்டிற்குள் அடைத்து வைத்துள்ளார். முட்டைக்குள் 12 வாட்ஸில் எரியும் சிறிய வண்ண விளக்குகளை பொருத்தியுள்ளார். இது ஒவ்வொன்றாக கண் சிமிட்டி எரிவதால் இருட்டில் முட்டையில் உள்ள துளைகள் பிரகாசமாக தெரிகின்றன. எலக்ரானிக்ஸ் பற்றி ஓரளவு தெரிந்து இருந்ததால் தானாகவே வடிவமைத்ததாக கூறினார். தனது சாதனையை முதலில் லிம்கா புத்தகத்தில் பதிவு செய்ய முயற்சித்து வருகிறார்.

பிரதீப் குமாருக்கு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உண்டு. கருப்பு வரைபட அட்டையில் தேச தந்தை காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் உருவங்களை துளைகளாலேயே வரைந்து உள்ளார். இந்த வரைபடத்திற்கு பின்னாலும் வெளிச்சம் கொடுத்து படங்களை பிரகாசமாக மின்னச் செய்து உள்ளார். தான் சார்ந்திருக்கும் வெல்டிங் துறையில் புதிய கருவியை கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளதாகவும் கூறினார் சாதனையாளர் பிரதீப்குமார்.

நன்றி: தினத்தந்தி - இளைஞர் மலர்

Thursday, April 20, 2006

சாதனை 2 - கைகளில் கலைவண்ணம்


கல்லிலே கலை வண்ணம் கண்டான்! என்றான் கவிஞன் ஒருவன். இந்த பாடல் வரிக்கு ஏற்ப கல்லில் மட்டும் இல்லாமல் கீழே போடும் மரக் கட்டைகள், கரையான் அரித்த மரப்பகுதிகளை வைத்து அழகாக சிற்பம் வடித்துள்ளார் ஹரீஸ்.

அவர் வடிவமைத்த சிற்பங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அவரை பற்றி அறிவோம்.

22 வயது இளைஞர் ஹரீஸ். சென்னை வட பழநி, கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் இவர் சென்னை திறந்தவெளி பல்கலை கழகத்தில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தை நடராஜன் கார்பென்டராக பணிபுரிகிறார். சிறு வயதில் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு வீட்டில் சும்மா இருக்கிற நேரங்களில் தனது தந்தைக்கு உதவியாக கார்பென்டர் பணிகளுக்கு செல்வார்.

இதனால் நுணுக்கமான பணிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொண்டார். மேலும் இந்தப் பணியில் இவருக்கு ஆர்வம் அதிகரிக்கவே, கடினமானப் பணிகளையும் செய்து பார்த்தார்.

இதில் முதலில் தடுமாறினாலும் தொடர்ந்து முயற்சி செய்ததால் கடினமானப் பணிகளைக் கூட எளிதாக செய்ய முடிந்ததாம். நுணுக்கமான சிற்பங்கள் வடிவமைப்பில் பல சிறபங்களை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்ததாம். அப்போது அவரது நினைவில் தோன்றியது தான் அனைவரும் கழித்துவிட்டு போடும் பொருட்களை கொண்டு மிகச் சிறிய அளவிலான சிற்பங்களை வடிவமைத்தால் என்ன என்று. அதற்கு செயல்வடிவமும் கொடுக்க ஆரம்பித்தார்.

இதுவரையில் நாம் பயன்படுத்தி விட்டு கீழே போடும் பனங்கொட்டை, தென்னை பட்டை, சிறிய அளவிலான சந்தனக்கட்டை, தேக்கு, ரோஸ்மரம், படாக், மூங்கில் மற்றும் பென்சில், நகம் போன்றவற்றை கொண்டு மிகவும் தத்ரூபமாக பல சிற்பங்களை வடிவமைத்துள்ளார்.

தென்னை மட்டையைக் கொண்டு சிறிய அளவிலான குடிலும், பனங்கொட்டையை கொண்டு தம்புரா, கிடார் போன்ற இசைக்கருவிகளையும், ஈச்சமரக் கொட்டையிலிருந்து டீ கோப்பை மற்றும் வண்டு, தேள் போன்ற பூச்சி இனங்களையும் அழகாக வடிவமைத்துள்ளார். மேலும் சிறிய அளவிலான மரத்துண்டுகளை கொண்டு சாவி கொத்து, பேனா, மற்றும் சந்தனமரத்துண்டில் பிள்ளையார், கொய்யா மரத் துண்டில் வீணை, ஆற்றுப்படுக்கைகளில் காணப்படும் கூழாங்கற்களைக் கொண்டும் அழகிய சிற்பங்களை வடிவமைத்துள்ளார்.

கரையான் அரித்த மரத் துண்டுகளை வைத்து அழகான அரண்மனை ஒன்றை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இதுவரையிலும் யாரும் செய்யாத அளவில் மிக நுட்பமாக 8 மி.மி நீளம், 3 மி.மி. அகலம் கொண்ட செருப்பு, பென்சிலை கொண்டு மிகச்சிறிய தாஜ்மஹால், கடுகளவில் லிங்கம் ஆகியவை இவரது நுணுக்கமான கை வண்ணத்தின் அம்சமாகும்.

அத்தி இலையில் வினாயகர், அரசமரத்து இலை கோகுல கிருஷ்ணன் போன்ற சாமி படங்களையும் அழகாக வடிவமைத்துள்ளார். இவரது இந்த திறமை குறித்து கேட்டபோது,

"எனது அம்மா, அப்பா, மற்றும் நண்பர்கள் கொடுத்த ஊக்கமே இந்த சாதனை புரியகாரணமாக இருந்தது. மேலும் வருங்காலத்தில் யாரும் செய்யமுடியாத அளவில் அழகிய சிற்பங்களை வடிவமைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதே லட்சியம்'' என்கிறார்.

சாதனை 1 - ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற தமிழ் மாணவி


மும்பையில் கடந்த ஆண்டு ஜுலை 26-ம் தேதி புயலுடன் கூடிய பலத்தமழை பெய்தது. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. தொடர்ந்து 15 நாட்கள் இடைவிடாது மழை பெய்தது. இதனால் மராட்டிய மாநில மித்தி நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மும்பை நகரமே தண்ணீரால் சூழப்பட்டது. இதனால் மும்பை நகர மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளானார்கள்.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டன. வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படடது. ரெயில்வே போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். மொத்தத்தில் மும்பை நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புயல் மழையின் காரணமாக மித்தி நதி செல்லக்கூடிய பகுதிகள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மீண்டும் இதே போல் மழைபெய்தால் மித்தி நதியால் பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஆகவே மித்தி நதியை சீரமைத்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம். இதற்காக பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பிரிவாக மித்தி நதி சீர்திருத்த திட்டக்குழுவின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஆலோசனைக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

இக்கட்டுரைப் போட்டியில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மித்தி நதியை சீரமைப்பு செய்வது பற்றி பல்வேறு விதங்களில் தங்கள் ஆலோசனையைக் கூறியுள்ளார்கள்.

போட்டியின் முடிவில் ஆறு மாணவ-மாணவிகளின் கட்டுரைகள் சிறந்ததாக தேர்வு பெற்றது. இந்த ஆறு மாணவ-மாணவிகளில் மேக்னா ராஜா என்ற மாணவியும் ஒருவர். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆம், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குனேரி தாலுகாவில் உள்ள நல்லான் குளம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை ராஜா இளங்கோ மும்பையில் தொழில் செய்து வருகிறார்.

மேக்னா மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது சாதனையை பாராட்டும் விதமாக ஜனாதிபதி அப்துல் கலாம் அவரைப் பாராட்டி பரிசு வழங்கினார்.

மும்பை விமான நிலையத்துக்கு வந்த அப்துல்கலாம் மாணவ-மாணவிகளின் கட்டுரை போட்டியைப் பற்றி கேள்விப்பட்டு அவர்கள் எழுதிய கட்டுரைகளையும் படித்து பார்த்தார். ஒவ்வொரு கட்டுரையின் சிறப்புகளையும் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினார்கள், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள்.

அவர்களுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் விமான நிலையத்தில் வைத்து பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது மராட்டிய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் உடன் இருந்தார். மித்தி நதி சீரமைப்பு திட்டத்திற்கு மாணவர்கள் கூறிய திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்துமாறும் மராட்டிய முதல்வர் விலாஸ் ராவ் தேஷ் முக்கிடம் ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி கையால் பரிசு பெற்ற தமிழக மாணவி மேக்னா ராஜா கூறும்போது, "எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஜனாதிபதி கையால் பரிசு வாங்கியதை வாழ்நாளில் மறக்க மாட்டேன். வருங்காலங்களில் நிறைய கட்டுரைகள் எழுதுவேன். அது நாட்டிற்கு பலன் உள்ளதாக இருக்கும். என்னுடன் சேர்ந்து பரிசு வாங்கிய மற்ற மாணவ-மாணவிகளையும் பாராட்டுகிறேன்,'' என்றார்.

நன்றி: தினத்தந்தி

இளம் சாதனையாளர்கள் - அறிமுகம்

என் இனிய நண்பர்களே!

சிறுவர் பூங்கா, சிறுவர் பாடல்கள், சிறுவர் உலகத்தை தொடர்ந்து குழந்தைகளை உற்சாகப்படுத்ததுவும், உன்னத நிலைக்கு உயர்த்தவும் இந்த வலைத்தளம் பயன்படும்.

நான் கேள்விப்பட்ட, படித்த, அறிந்த இளம் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை கொடுக்க இருக்கிறேன். இதை படித்து உங்கள் குழந்தையும் சாதித்து, சாதனையாளர் பட்டியலில் இடம் பெற உதவுங்கள்.

உங்கள் ஒவ்வொருவரின் வெற்றியும், உங்கள் குழந்தைகளின் நடத்தையிலும், அவர்கள் இவ்வுலக வாழ்வில் வெற்றி பெற்று சாதனையாளராக திகழ்வதில் தான் இருக்கிறது. கோடிக்கணக்கான பணத்தை குழந்தைகளுக்கு சேகரிப்பதை விட, கோடிகள் சம்பாதிக்கும் வல்லமை படைத்தவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.

உங்கள் நேரத்தை அவர்களுக்கும் செலவழியுங்கள், சாதித்தவர்களை பற்றி அடிக்கடி பேசுங்கள், தயவு செய்து மட்டம் தட்டி பேசவோ, அல்லது மற்றவர்களோடு தொடர்பு படுத்தியோ பேச வேண்டாம். அவர்களாகவே உணர்ந்து சாதிக்கும் எண்ணம் படைத்தவராக மாற உதவுங்கள்.

இப்பகுதிக்கான பதிவுகள் அனைத்தும் பல தளங்களில் சேகரிக்கப்படுகிறது, பதிவுகள் கொடுத்து உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள்.


நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!